Monday, July 29, 2013

ஸ்ரீபைரவர் சித்தர் மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

ஸ்ரீபைரவர் சித்தர்
மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்

உலகில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதர்கள் பலர், மிகவும் குறுகிய காலமே நினைவுகொள்ளப்படுகிறார்கள். அவர்கள் மறைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் முற்றிலும் மறக்கப்படுகிறார்கள். ஆனால் தவச்சீலர்களான ஞானிகளின் நிலை, பெரும்பாலும் இதுவல்ல. அப்படிப்பட்ட மகான்களைப் பற்றி தாங்கள் அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், நாமும் அறியும்படிச் செய்து வந்துள்ளனர் நமது மூத்தோர்கள். அதே போக்கில் நாமும் மகான்களை மறவாது, இளைய தலைமுறைகளுக்கு அவர்களைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். மேலும், அந்த மகான்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து, வாழ்வில் மேன்மை அடையவேண்டும்.




 
19, 20ஆம் நூற்றாண்டுகளில் நம்மிடையே வாழ்ந்த மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள். ""இறைவன் அளித்த வாழ்வு பிறர்க்குப் பயன்படுவதற்காகவே'' என்ற குறிக்கோளுடன், பசிப்பிணி போக்குவதற்கும், உடற்பிணி போக்குவதற்கும் தனது தெய்வீக சக்தியைப் பயன்படுத்தியவர் இந்த அருளாளர். அது மட்டுமின்றி "இறைவனுடைய குடில்' என்று சொல்லப்படும் ஆலயங்களையும் சீர்செய்து பக்தி மணம் பரப்பினார். இவரைப் பற்றி காஞ்சி மகா சுவாமிகள் தம்முடைய அருள் உரையில் சிலாகித்துக் கூறியுள்ளார்கள். 

ராமலிங்க சுவாமிகள், 1876ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் அவதரித்தார். அகத்திய நதி (வெட்டாறு) தெற்கு வடக்காகப் பாயும் தன்மையால், காசிக்கு இணையாகப் போற்றப்படும் புண்ணிய பூமி பாடகச்சேரி கிராமம் ஆகும். (கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அப்பால் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது). தனது 12வது வயதில் இங்கே வருகை தந்து, மாடுகளை மேய்க்கும் பணியைச் செய்தார் ராமலிங்க சுவாமிகள். 

அந்த வயதில் வடலூர் வள்ளலாரிடம் ஞானோபதேசம் பெற்றார். தனது ஞானத்தால் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் தரிசனம் தருவது, தோன்றுவது, மறைவது போன்றவற்றை நிகழ்த்தியுள்ளார். உலோகத்தைத் தங்கமாக மாற்றும் ரசவாதம் அறிந்தவர் இவர். தியானத்தில் உடல் துவாரங்கள் ஒன்பதையும் தனித்தனியாகப் பிரிக்கும் "நவ கண்ட யோகம்' பயின்றவர். பைரவ உபாசகர்.


 வெகு தொலைவில் இருப்பார். இவரை அழைத்து வருமாறு நாய்களிடம் வேண்டினால், அடுத்த நொடியில் அதே நாய்களுடன் கண் முன்பே தோன்றுவார். நூற்றுக்கணக்கான இலைகளில் அறுசுவை உணவு வைத்து, இவர் அழைத்தவுடன் எங்கிருந்தோ பெரும் திரளாக நாய்கள் தோன்றி வந்து உண்டுவிட்டுப் போகும் அதிசயங்களும் நிகழ்ந்தது உண்டு. 

ராமலிங்க சுவாமிகள், பல ஆண்டுகள் பாடகச்சேரி கிராமத்தில் தங்கியிருந்தார். ஏழை, எளிய மக்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் மூலிகை மருந்துகளும், விபூதியும் கொடுத்து, மரணம் விளைவிக்கும் பெரும் நோய்களையும் தீர்த்து வைத்தார். இறந்து போன சிலரை உயிர்ப்பித்துள்ளார். இதனால் பெரும் புகழ் அடைந்தார். பல கோயில்களுக்கு திருப்பணி செய்ததோடு, புதிதாகச் சில கோயில்களையும் நிர்மாணித்தார். அவ்வப்போது அன்னதானங்கள் நடத்தி ஏழைகளின் பசிப் பிணி போக்கினார். பெங்களூர், தஞ்சை, சென்னையில் உள்ள கிண்டி போன்ற ஊர்களில் ராமலிங்க சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் உள்ளன. 

சுவாமிகளின் காலத்தில் கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோயிலின் மதில் சுவர்களும், ராஜகோபுரமும் இடிந்து சிதிலமாகி இருந்தன. அவற்றைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய பெரும் செல்வந்தர்களே அஞ்சினார்கள். ஆனால் 1920ஆம் ஆண்டு வாக்கில் ராமலிங்க சுவாமிகள் தனி ஒரு நபராக முன்வந்து, தன் கழுத்தில் உண்டியலைக் கட்டிக் கொண்டு தெருத் தெருவாக அலைந்து நிதி வசூல் செய்தார். அந்தத் தொகையின் மூலம் திருநாகேஸ்வரம் ஆலயத்தைப் புதுப்பித்தார். இப்பெரும் பணியை நாடே வியந்து போற்றியது. திருநாகேஸ்வரம் கோயிலில் ராமலிங்க சுவாமிக்கு தனி சந்நிதியும், ராஜகோபுரத்தில் திருவுருவச்சிலையும் உள்ளன. அப்போது அந்த ஆலயக் குடமுழுக்கு விழா, காஞ்சி மகா சுவாமிகள் அருளாசியுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல வசதிகள் இல்லாத அக்காலத்திலேயே பல அன்னதானங்களை நடத்தியவர் ராமலிங்க சுவாமிகள். குறிப்பாக 1929 மற்றும் 1932ஆம் ஆண்டுகளில், இரவு-பகலாகக் கஷ்டப்பட்டு, தலா 1 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற 2 அன்னதானங்களை நடத்திக் காட்டினார். 
"அருட் பெரும் ஜோதி! தனிப் பெரும் கருணை' என்ற போதனையைப் பரப்பி, இன்றளவும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கும் வடலூர் வள்ளலாரின் சீடரான ராமலிங்க சுவாமிகள், தனது குருநாதரின் மீது ஒப்பற்ற அன்புடையவர்; அவர் காட்டிய வழியில் பெரிதும் சென்றவர். நேபாளம் உள்ளிட்ட வட இந்தியத் துறவிகளிடமும் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்.


 கர்நாடகத்தை சேர்ந்த "எரிதாதா' சுவாமிகள் மற்றும் "நேபாள சுவாமிகள்' என்றழைக்கப்பட்ட மகான்களிடமும் பக்தி உடையவர் பாடகச்சேரி சுவாமிகள். 
கும்பகோணம் - காரைக்கால் சாலையில் விஸ்தாரமான ஓர் இடத்தை வாங்கி, முகப்புக் கட்டிடம் கட்டி தனது குருநாதர் சிலைகளை அமைத்து வழிபட்டு வந்தார் (1933-1949). இது "முத்துப் பிள்ளை மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. இன்றளவும் பக்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்கிறார்கள். ஆனால் இங்குள்ள, ராமலிங்க சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட பாதாள அறையுடன் கருங்கற்களால் ஆன சத்திய ஞான சபைக் கட்டிடம், ஏனோ முழுமையடையவில்லை. இங்கே நாள்தோறும் ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி வந்தார் பாடகச்சேரி சுவாமிகள். இதேபோல் சென்னை, திருவொற்றியூரில், பட்டினத்தார் சமாதிக்கு அருகில், கருங்கற்களினால் கலையழகுடன் கூடிய சத்திய ஞான சபைக் கட்டிடத்தை நிறுவியுள்ளார். இங்குதான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. 1949ஆம் ஆண்டு, ஆடிப் பூர தினத்தில் ஜீவசமாதி அடைந்தார் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள். 
மாபெரும் இத்தவச்சீலர், பல்லாண்டுகள் வசித்து வந்த பாடகச்சேரியில் உள்ள மடம், கடந்த 52 ஆண்டுகளாக (1950-2002) கவனிப்பார் இல்லாமல் சிதிலமடைந்து புதர்கள் மூடிக் காணப்பட்டது. ஆயின் 2002, 2008ஆம் ஆண்டுகளில் புதிதாகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, தற்போது சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2010ஆம் ஆண்டில் 2200 சதுர அடி பரப்பளவில் அன்னதானக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. 

புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த அன்னதானக் கூடத்தின் திறப்பு விழாவும், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின்  குரு பூஜை வைபவமும் வருகிற ஆடிப் பூர தினத்தில்  பாடகச்சேரி கிராமத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. ""கரும நோய் தீருவதற்கு தருமந்தான் நல்ல வழி'' என்று உணர்த்தி, செயல்படுத்திக் காட்டிய இந்த மகானின் குரு பூஜை வைபவத்தில், ஆன்மீக அன்பர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். 
(பேரூந்து வழித் தடம்: கும்பகோணம், நீடாமங்கலம் சாலையில் பாடகச்சேரி பஸ் நிறுத்தம்) இம்மடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் குரு பூஜை, தைப்பூச தினங்களில் பெரிய அளவில் அன்னதானம், மாதந்தோறும் வியாழன், பௌர்ணமி தினங்களில் அன்னதானம், ஞாயிறு வார வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. "தானத்தில் உயர்ந்தது அன்னதானம்' என்பார்கள். இந்தச் சீரிய பணி தொடர்ந்து நடைபெற்று வர அன்பர்கள் நன்கொடைகள் அளித்து உதவலாம். 

அருட் பெரும் ஜோதி!     தனிப் பெரும் கருணை 
அருட் பெரும் ஜோதி!    தனிப் பெரும் கருணை

தொடர்புக்கு:- 
பாடகச்சேரி சித்தர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி நிரந்தர அன்னதானக் கமிட்டி மற்றும் கல்வி அறக்கட்டளை, பாடகச்சேரி-612804, வலங்கைமான் தாலுக்கா (கும்பகோணம்). 
தொலைபேசி தொடர்புக்கு:- ஏ. இளங்கோ, மானேஜிங் டிரஸ்டி. மொபைல் எண்: 94430 75837 மற்றும் 98417 18839, 04364-231345.

1 comment:

  1. உங்கள் பதிவு மிக அருமை. வாழ்த்துக்களுடன்
    பேராசிரியர் முனைவர் சரவணன் நடேசன்
    புத்தனாம்பட்டி,
    துறையூர்
    வட்டம் திருச்சி மாவட்டம்

    ReplyDelete