Monday, February 18, 2013

திருக்குறுக்கை-'அட்ட வீரட்டானம்'

அட்ட வீரட்டத் தலங்களிலொன்றான திருக்குறுக்கை - கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்





திருமந்திரம் 


இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியதுபோக்கி
திருந்திய காமன் செயலழித்தங்கண்
அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே         (திருமந்திரம் 346)

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

திருக்குறுக்கை - திருநேரிசை

(நான்காம் திருமுறை)

ஆதியிற் பிரம னார்தாம் 
அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர் 
உணருமா றுணர லுற்றார்
சோதியுட் சுடராய்த் தோன்றிச் 
சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ் சோலைக் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நீற்றினை நிறையப் பூசி 
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும் 
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று 
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் 
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் 
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

சிலந்தியும் ஆனைக் காவிற் 
திருநிழற் பந்தர் செய்து
உலந்தவண் இறந்த போதே 
கோச்செங்க ணானு மாகக்
கலந்தநீர்க் காவி ரிசூழ் 
சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனிற் பிறப்பித் திட்டார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஏறுடன் ஏழ டர்த்தான் 
எண்ணியா யிரம்பூக் கொண்டு
ஆறுடைச் சடையி னானை 
அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
வேறுமோர் பூக்கு றைய 
மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
கூறுமோர் ஆழி ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே

கல்லினால் எறிந்து கஞ்சி 
தாமுணுஞ் சாக்கி யனார்
நெல்லினார் சோறு ணாமே 
நீள்விசும் பாள வைத்தார்
எல்லியாங் கெரிகை ஏந்தி 
எழில்திகழ் நட்ட மாடிக்
கொல்லியாம் பண்ணு கந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே

காப்பதோர் வில்லும் அம்புங் 
கையதோர் இறைச்சிப் பாரந்
தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் 
தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்யக் 
குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நிறைமறைக் காடு தன்னில் 
நீண்டெரி தீபந் தன்னைக்
கறைநிறத் தெலிதன் மூக்குச் 
சுட்டிடக் கனன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் 
நீண்டவா னுலக மெல்லாங்
குறைவறக் கொடுப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

அணங்குமை பாக மாக 
அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் 
மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க் கருள்கள் செய்து 
காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர் போலுங் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

எடுத்தனன் எழிற் கயிலை 
இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்தொரு விரலால் ஊன்ற 
அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந ரம்பால் 
வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாணாள் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

நெடியமால் பிரம னோடு 
நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணார் 
அருச்சுனற் கம்பும் வில்லுந்
துடியுடை வேட ராகித் 
தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்தமாம் அயனு மாலும் 
அன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமான் என்று 
தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்ட மிமுன் 
சீருடை ஏழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.

திருச்சிற்றம்பலம்              திருச்சிற்றம்பலம்         திருச்சிற்றம்பலம்



                                          
 
 
மூலவர்:வீரட்டேஸ்வரர்
 உற்சவர்:யோகேஸ்வரர்
 அம்மன்/தாயார்:ஞானம்பிகை
 தல விருட்சம்:கடுக்காய் மரம், அரிதகிவனம்
 தீர்த்தம்:திரிசூல் கங்கை , பசுபதி தீர்த்தம்
 ஆகமம்/பூஜை:-
 பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:திருக்குறுக்கை
 ஊர்:கொருக்கை
 மாவட்டம்:நாகப்பட்டினம்
 மாநிலம்:தமிழ்நாடு
 



 தல சிறப்பு:
   
 ஆவுடையாரில் தாமரை மலர் இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். அட்டவீரட்ட தலம் என்ற சிறப்பும் பெருமையும் பெற்ற கோயில் இது. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான இங்கு காமனை எரித்துள்ளார். ரதி, மன்மதன் உற்சவத் திருமேனிகள் இத்தலத்தில் உள்ளன. தீர்த்தவாகு முனிவர் என்ற முனிவர் இறைவனுக்கு திருமுழுக்காட்ட கங்கையை கொண்டு வந்த சிறப்பு பெற்ற தலம்.


   
 பொது தகவல்:
   
 இத்தலவிநாயகர் குறுங்கை கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.



காம சம்கார மூர்த்தி: அட்டவீரட்டத்தலங்களில் இங்கு சிவபெருமான் காமனை எரித்தார் என்பது வரலாறு.காம தகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காம தகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன், இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

சம்காரத்தினால் பெயர் பெற்ற ஊர்கள்:  இந்த திருக்குறுக்கை என்ற ஊரைச் சுற்றியுள்ள ஊர்கள் பெயர்கள் இத்தலத்து வரலாற்றோடு சம்பந்தப்பட்டவை. சிவபெருமானின் தவத்தை கலைக்க மன்மதன் அதற்காக தன் கையில் கங்கணம் கட்டிக் கொண்ட இடம் கங்கணம் புத்தூர். பால் சாப்பிட்ட இடம் பாலாக்குடி.வில் எடுத்த இடம் வில்லினூர். குறி பார்த்த இடம் காவளமேடு. தன்னோடு வந்தவர்களோடு ஐவநல்லூரில் கூடி இங்கிருந்து வில் விடு என்று கூறினார்களாம்.

அந்த இடம் சரியாக இல்லை என்று கூறி மேட்டுக் கொற்கை என்ற இடத்துக்கு வந்து நின்று குறி பார்க்கையில் பின்பக்கமிருந்தும் இல்லாது முன்பக்கமிருந்தும் இல்லாது ஒரு ஓரமாக நின்று மன்மதன் கணை விட்டாராம்.
 
   
 
பிரார்த்தனை
   
 அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசத்தால் ஏங்குபவர்கள் இத்தல மூர்த்தியான காமதகன மூர்த்தியை வழிபட்டால் தாங்கள் விருப்பப்படும் நபரிடம் அன்பு, பிரியம், நேசம், விருப்பம், மற்றும் பாசம் கிடைக்கும்.  இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வீரட்டேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்  அத்துடன் உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். தியான பலமும், மனோபலமும் கிடைக்கும் . மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி , உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடலாம். 
   
நேர்த்திக்கடன்:
   
 கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துகிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
   
 தலபெருமை:
   
 பெருமாளின் புத்திர சோகத்தை போக்கியதால் இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்படுகிறது. இறைவன் யோகேஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு சிவன் யோக மூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதாக பார்க்க இயலாது. எப்படியாவது தடங்கல் வந்து விடும். அதையும் மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோக நிலை கைகூடும் என்கிறார்கள். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக இருப்பதால், தெரியாமல் தவறு செய்பவர்கள் இவரை வணங்கினால் நமது தவறை மன்னித்து அனுக்கிரகம் புரிகிறார்.

இங்குள்ள குறுங்கை கணபதிக்கு மட்டும் இங்கு கஜபுஷ்ட விமானம் இருக்கும். பூர்வ ஜென்ம தோஷ பரிகாரம், புத்திர காமேஷ்டி யாகம், 70 வயதில் செய்யக்கூடிய பீமரதசாந்தி கல்யாணம் ஆகியன இத்தலத்தில் முக்கியமானவை. யோகேஸ்வரரை வணங்கினால் இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும், காம குரோதங்கள் விலகும்.

இறைவனின் நெற்றிக்கண் மகரக் கொடியோனை சுட்டு எரித்தது(அனங்கன்) பின் வணங்கி மறுபிறவி எடுத்த தலம்.
 
   
  தல வரலாறு:
   
 சிவபெருமான் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரது தியானத்தால் உலகம் வெப்பத்தால் தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.ஆனால் முருகனோ தன்னால் தந்தையின் தவத்தை கலைக்க முடியாது என்று ஒதுங்க கடைசியில் மன்மதனிடம் சென்று எப்படியாவது அவரது தியானத்தை கலைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்படி மன்மதன் நடக்கப்போவது தெரியாமல் தனது அறியாமை மேலிட தன்னிடம் உள்ள வில்லை எடுத்து சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுத்தார்.ஆனால் கணையோ புஷ்பமாக மாறி வந்து விழுகிறது.

உடனே ஈசுவரன் மன்மதன் இருக்கும் இடம் நோக்கி ஒரு பார்வை பார்த்தார். அவ்வளவுதான். எம்பெருமானின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டு எரித்து விட்டது. பஸ்பமாகிப் போய்விட்டார். அதன்பின் ரதி ஈசனிடம் என் கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று கேட்க, உனது வேண்டுகோளுக்காக ஒருநாள் மட்டும் மன்மதனை உண்டுபண்ணி தேய்பிறையில் தெய்வலோகத்திற்கு அனுப்பிவிடுவதாக கூறினார்.அதுபடி மன்மதன் உயிர்பெற்றதாக வரலாறு கூறுகிறது.
 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவரான சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.  
  






No comments:

Post a Comment